அபுதாபியில் இன்று நடைபெறும் சர்வதேச யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க இலவச பஸ் வசதியை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது.
இந்திய தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அபுதாபியில் உள்ள ஷேக் ஜாயித் கிரிக்கெட் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு 8-வது சர்வதேச யோகா நிகழ்ச்சி நடக்க இருக்கிறது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் சஞ்சய் சுதிர் (Sanjay Sudhir)தலைமை தாங்குகிறார். அமீரக சகிப்புத்தன்மை மற்றும் சகவாழ்வுத்துறை மந்திரி ஷேக் நஹ்யான் பின் முபாரக் அல் நஹ்யான்(Sheikh Nahyan bin Mubarak Al Nahyan) சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்த யோகா நிகழ்ச்சியில் பங்கேற்க பலர் ஆர்வத்துடன் பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களின் வசதிக்காக இலவச பஸ் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த பஸ் போக்குவரத்து மாலை 5 மணி முதல் 6.30 மணி வரை இருக்கும். அபுதாபி மாநகராட்சியின் கேட் எண் 12 அதாவது சலாம் சாலை அருகில் இருந்தும், மதினத் ஜாயித் ஷாப்பிங் சென்டர் ஆகிய இடங்களில் இருந்தும் இந்த பஸ்கள் புறப்பட்டு செல்லும்.
இதில் பயணம் செய்ய முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை அளிக்கப்படும். கிரிக்கெட் மைதானத்தில் பங்கேற்பவர்களுக்கு ‘டி-சர்ட்’ வழங்கப்படும்.
மேலும் யோகா பயிற்சி மேற்கொள்ள அதற்கான விரிப்புகள், தண்ணீர் உள்ளிட்டவையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.