யாழில் வாள் வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளை செய்த பெண் உட்பட நால்வர் கைது

0
557

யாழ்.பருத்தித்துறை – துன்னாலை, மடத்தடி பகுதியில் நள்ளிரவு வேளை வீடு புகுந்து வாள் வெட்டு தாக்குதல் நடத்தி கொள்ளையிட்டு சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 11ஆம் திகதி நள்ளிரவு வீட்டுக்கதவினை உடைத்து வாள்களுடன் உள்நுழைந்த 6 பேர் கொண்ட கும்பல் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை சேதப்படுத்தியதுடன் வீட்டிலிருந்த 6 பேருக்கு காயங்களை ஏற்படுத்தியதுடன் 12 பவுண் தங்க நகைகளையும் கொள்ளையிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் படுகாயமடைந்தவர்கள் மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப்பொலிஸ் மா அதிபர் விஜித் லியனகேயின் பணிப்புக்கமைய தலைமைப் பொலிஸ் பரிசோதகர் நிகால் பிரான்ஸிஸ் தலைமையிலான மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

பலாலி பகுதியில் வைத்து 36 வயதுடைய ஒருவரும் முடவத்தையைச் சேர்ந்த 22 வயதுடைய ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவரின் சகோதரர் தப்பிச்சென்றுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு ஆணும் கொள்ளையிட்ட நகைகளை உடமையில் வைத்திருந்த பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்கள் பயன்படுத்திய வாள்களும் கைப்பற்றப்பட்டன. மேலதிக நடவடிக்கைகளுக்காக சந்தேக நபர்கள் நால்வரும் பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர்.