சிங்கப்பூரில் தமிழ்ப்பெண் ஒருவர் திருட்டு மற்றும் ஏமாற்று வழக்கில் சிக்கிய நிலையில் நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
காப்பகத்தில் பணிபுரிந்த லதா நாராயணன் என்ற 59 வயதுடைய பெண் ஒருவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த பெண் பணியாற்றும் காப்பகத்தில் 65 வயதான முதியவரை கவனித்து கொள்ளும் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. கடந்த 2019ஆம் ஆண்டு அந்த முதியவரின் ஏ.டி.எம் அட்டையை எடுத்து 1,870 சிங்கப்பூர் டொலர் பணத்தை திருடியதோடு அட்டையை பயன்படுத்தி உணவு பொருட்கள் மற்றும் கழிப்பறைக்கு தேவையான பொருட்களையும் வாங்கியுள்ளார்.
முதியவர் கொடுத்த புகாரையடுத்தே பொலிசார் விசாரணையில் லதா கடந்த 2019ல் சிக்கினார். அப்போது தான் லதா ஏற்கனவே கடந்த 2017ல் சொத்து தொடர்பான திருட்டில் சிக்கி நீதிமன்றம் மூலம் 600 சிங்கப்பூர் டொலர் அபாரம் பெற்றிருக்கிறார் என தெரியவந்தது. இந்நிலையில் தற்போது அவர் செய்த குற்றத்திற்காக 4,000 சிங்கப்பூர் டொலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது நீதிமன்றத்தில் ஆஜராகி பேசிய லதா தரப்பு வழக்கறிஞரான அஸ்வின் கணபதி லதா தனது இளமை பருவத்தில் கொடுமைப்படுத்துதலுக்கு ஆளானதாகவும் தனது திருமண பந்தத்தில் துன்புறுத்தல்களை அனுபவித்ததாகவும் தெரிவித்தார்.
அதே போல காப்பகத்தில் லதா கவனித்துக்கொண்ட நபராலும் அவர் இன்னல்களுக்கும் துன்புறுத்தல்களுக்கும் ஆளானார் என வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை சம்பவத்துடன் தொடர்புடைய அந்த முதியவர் கடந்தாண்டு உயிரிழந்துவிட்டதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.