உக்ரைனில் ரஷ்யா ஏற்படுத்திய பாரிய நஷ்டத்திற்கு எதிராக அந்நாட்டின் மீது உக்ரைனின் பெரும் பணக்காரரான ரினாட் அக்மெடோவ் வழக்குத் தொடர திட்டமிட்டுள்ளார்.
உக்ரைனின் மிகப்பெரிய உருக்கு உற்பத்தி நிறுவனமான ‘மெடின்வெஸ்ட்’ நிறுவனத்தை வைத்திருக்கும் ரினாட் அக்மெடோவ் இதனை தெரிவித்துள்ளார்.
பேரழிவிற்குள்ளான துறைமுக நகரமான மரியுபோலில் அவருக்கு சொந்தமான எஃகு ஆலைகள், இல்லிச் ஸ்டீல் அண்ட் அயர்ன் ஒர்க்ஸ், ரஷ்ய குண்டுவீச்சு தாக்குதலின் போது மோசமாக சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் உக்ரேனிய செய்தி இணையதளத்தில் அவர் தெரிவித்ததாவது,
“அசோவ்ஸ்டல் உருக்கு ஆலை ரஷ்ய குண்டுவீச்சு மற்றும் ஷெல் தாக்குதலால் பெரும் சேதத்தை சந்தித்தது.
எஃகு ஆலைகள் மீது ரஷ்ய துருப்புகளின் தாக்குதலினால் ஏற்பட்டுள்ள இழப்புகளின் மொத்த மதிப்பு 17 பில்லியன் டாலர் முதல் 20 பில்லியன் டாலர் வரை இருக்கும். நஷ்டமான இறுதித் தொகை ரஷ்யாவிற்கு எதிரான வழக்கில் தான் தீர்மானிக்கப்படும்” என்றார்.
மேலும் அவர் கூறியதாவது,
“நாங்கள் நிச்சயமாக ரஷ்யா மீது வழக்குத் தொடுப்போம். அதன்மூலம், அனைத்து இழப்புகள் மற்றும் இழந்த வணிகங்களுக்கு சரியான இழப்பீடு கோருவோம்.
ரஷ்யாவுடனான போர் தொடங்கியதில் இருந்து நான் உக்ரைனில் தான் இருக்கிறேன். நாங்கள் எங்கள் தேசத்தையும், அதன் வெற்றியையும் உறுதியாக நம்புகிறோம்” என்று அக்மெடோவ் கூறினார்.