ஹோட்டல்களும் தங்குமிடங்களையும் கேட்கும் எம்.பிக்கள்!

0
738

தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

கொழும்பில் இருந்து வெளியில் சென்றுள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீடு திரும்ப விரும்பியதாகவும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக அதனைச் செய்ய முடியாமல் போனதாகவும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

“எனவே, அவர்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பில் தங்குவதற்கு ஹோட்டல் ஒன்றை முன்பதிவு செய்யுமாறு என்னிடம் கோரியுள்ளனர்,” என்று அவர் மேலும் கூறினார்.

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்து கொள்வதில் உள்ள சிரமங்களை ஒரு சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே சமூக ஊடகங்கள் ஊடாக குரல் கொடுத்து வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படுவது தொடர்பான அறிக்கைகள் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட நிலையில் சபாநாயகர் இதனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் மானிய விலையில் எரிபொருள் வழங்கப்படவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.