மஹிந்த மீண்டுமொரு மறைவிடத்தில் ஒதுங்கினார்!

0
671

நாட்டில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் திருகோணமலை கடற்படை முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்த முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அங்கிருந்து வெளியேறி பிறிதொரு மறைவிடத்துக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காலிமுகத்திடல் கோட்டா கோ கம மற்றும் அலரி மாளிகைக்கு எதிரில் மைனா கோ கம போராட்டகாரர்கள் மீது மஹிந்த ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்திய பின்னர் நாடளாவிய ரீதியில் வெடித்த மக்கள் எதிர்ப்பால் மஹிந்த ராஜபக்ஷ பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதனை அடுத்து அலரி மாளிகைக்கு எதிரில் போராட்டகாரர்கள் தொடர்ந்தும் போராட்டம் நடத்தி வந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினரின் உதவியுடன் அவர் அங்கிருந்து வெளியேறி திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதேசமயம் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தாம் திருகோணமலை கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றதை கடற்படை தளபதியும் ஊடக சந்திப்பு ஒன்றில் ஒப்புக்கொண்டார்.

முன்னாள் பிரதமர் என்ற வகையில் மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியமானது எனவும் இதன் காரணமாக அவர் கடற்படை முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் வெளியேற விரும்பும் நேரத்தில் அனுப்பி வைக்க தயாராக இருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெளியேறியுள்ள முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கொழும்புக்கு அருகில் மறைவிடம் ஒன்றுக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இதனையடுத்து மஹிந்த தங்கி இருக்கும் பகுதியின் பாதுகாப்பை பாதுகாப்பு தரப்பினர் பலப்படுத்தியுள்ளனர்.

அத்துடன் மஹிந்த ராஜபக்ஷவுக்கு மேலதிக பாதுகாப்பை வழங்கும் நோக்கிலேயே சிறப்பு பொலிஸ் அணியினர் கொழும்புக்கு அழைக்கப்பட்டதாகவும் அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.