காலி முகத்திடல் சம்பவம் தொடர்பில் எம்.பிகளிடம் CID அதிரடி வாக்குமூலம்!

0
608

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக சபாநாயகருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் சபாநாயகருக்கு இது தொடர்பில் கடிதம் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

காலி முகத்திடல் அமைதியின்மை சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 07 பேர் உள்ளிட்ட 25 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யுமாறு சட்டமா அதிபரினால் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு நேற்று பணிப்புரை விடுக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய குறித்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் கட்டாணமாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதாக குற்றப் புலனாய்வு பிரிவு சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.

இதேவேளை, காலி முகத்திடல் உள்ளிட்ட அமைதியின்மை சம்பவங்கள் தொடர்பில் நேற்றைய தினமும் 258 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் கடந்த வாரம் இடம்பெற்ற அமைதியின்மை சம்பவங்களில் அரச மற்றும் தனியார் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை, காலிமுகத்திடல் மற்றும் அலரி மாளிகை போராட்டக்காரர்களை தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.