பாதுகாப்பு படை அதிகாரிகளின் வீடுகளை தாக்குங்கள்: தூண்டிவிடும் வகையில் முகநூல் பதிவு!

0
692

முப்படையினர் மற்றும் பொலிஸ் அதிகாரிகளின் வீடுகளுக்கு சேதத்தை ஏற்படுத்துமாறு கூறி, முகநூலில் பதிவு ஒன்றை செய்து, மக்களின் ஆத்திரத்தை தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் தேசிக குருப்பு என்ற நபர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

நிட்டம்புவை பொலிஸார் இந்த நபரை நேற்று கைது செய்துள்ளதுடன் இன்று அத்தனகல்லை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளனர்.

இந்த சந்தேக நபர் இராணுவத்தில் லெப்டினட் தர அதிகாரியாக கடமையாற்றிய போது, இராணுவ ஒழுக்கத்திற்கு விரோதமாக செயற்பட்ட காரணத்தினால் கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் திகதி இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்ட நபர் என்பதை இலங்கை இராணுவம் உறுதிப்படுத்தியுள்ளது.

2010 ஆம் ஆண்டில் இராணுவத்தில் இணைந்துக்கொண்ட இந்த தனது கட்டளை அதிகாரியின் கையெழுத்தை போலியாக பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் இராணுவத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில நாட்களில் கலவரமாக செயற்பட்டு சொத்துக்களுக்கு சேதங்களை ஏற்படுத்திய நபர்களை தூண்டிவிடும் வகையில் முகநூல் பதிவை இட்டுள்ளதுடன் அதில் இராணுவம் மற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளின் வீடுகள் குறித்து கவனம் செலுத்துமாறு கூறியுள்ளார்.

சந்தேக நபர் நிட்டம்புவை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னரே அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் குறித்து நிட்டம்புவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.