ராஜபக்சர்களுக்கு ஆதரவு வழங்கும் சுப்பிரமணிய சுவாமி: எச்சரிக்கை விடுத்த அசாத் சாலி!

0
639

“இந்தியாவின் முன்னாள் அமைச்சர் சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்சர்களை பாதுகாக்க ஆதரவு வழங்குவதை உடன் நிறுத்த வேண்டும்” என தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் மேல் மாகாண முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

காலிமுகத்திடலில் மகிந்தவின் அராஜகக் கும்பல் அமைதியான மக்கள் போராட்டத்தைக் குழப்பியடித்து, அறவழிப் போராட்டத்தில் ஈடுபட்ட அப்பாவி இளைஞர், யுவதிகள் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் நடத்தியமைக்கு எதுவித கண்டனமும் தெரிவிக்காத சுப்பிரமணிய சுவாமி, ராஜபக்சர்களுக்கு பக்காளி வேலை பார்த்துக்கொண்டிருப்பதை கைவிட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

ராஜபக்சர்களுடன் வியாபார டீல் வைத்துள்ள சுப்பிரமணிய சுவாமி, இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்புமாறு டுவிட்டர் செய்தி ஒன்றில் கோரிக்கை விடுத்துள்ளார்.

பி.ஜே.பி யின் அடிவருடியான இவர், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களை இந்தியப் பிரதமர் மோடி கருவறுப்பதற்கு துணை நின்றவர். அதேபோன்று, இலங்கையில் சிறுபான்மை மக்களை ராஜபக்ச அரசு துவம்சம் செய்வதற்கும் ஒத்தூதிக்கொண்டிருப்பவர் இலங்கை மக்கள், தமது நாட்டு இராணுவத்தில் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர்.

இங்குள்ள பிரச்சினைகளை சுமுகநிலைக்கு கொண்டுவர அவர்களிடம் போதிய ஆள்பலம் உண்டு. எனவே, இங்கு வெளி இராணுவம் தேவையில்லை என்பதையும் சுப்பிரமணிய சுவாமி புரிந்துகொள்வதுடன், இந்திய இராணுவம் இலங்கையில் நிலைகொண்டிருந்த போது வடக்கு, கிழக்கு மக்கள் மீது மேற்கொண்ட அட்டூழியங்களையும் சுப்பிரமணிய சுவாமி மீட்டிப்பார்க்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.