வெளிநாட்டுத் தூதரங்களை நாடும் ஆளும் தரப்பு!

0
625

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலைமையால் தமக்கு எவ்வித பாதுகாப்பும் இல்லை என ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கடிதங்கள் மூலம் கொழும்பில் உள்ள வெளிநாட்டுத் தூதரங்களுக்கு அறிவித்துள்ளனர்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வன்முறைகள் காரணமாக ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் கொல்லப்பட்டுள்ளதுடன் எதிர்க்கட்சியை சேர்ந்த ஒரு நாடாளுமன்ற உறுப்பனர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் அவர்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன் 50க்கும் மேற்பட்ட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள், சொத்துக்கள் முற்றாக தீ வைத்து அழிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பொறுப்புக் கூற வேண்டிய பாதுகாப்பு தரப்பினர் இந்த நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரவோ, முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவோ நடவடிக்கை எடுக்கவில்லை என ஆளும் கட்சியின் அரசியல்வாதிகள், தூதரகங்களுக்கு அனுப்பியுள்ள கடிதங்களில் கூறியுள்ளனர்.

இதேவேளை, அரசாங்கத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் வெட்கத்திற்கும் வேதனைக்கும் உள்ளாகி இருப்பதாகவும் அவர்கள், தமது கடிதங்களில் தெரிவித்துள்ளனர்.