கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இராணுவத்தினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கையை முன்னெடுத்துள்ளனர். கவச வாகனங்களைப் பயன்படுத்தி ரோந்து செல்லும் படையினர் இன்று (11) காலை கொழும்பில் ரோந்துப் பணியை ஆரம்பித்துள்ளனர்.
விஷேட அதிரடிப் படையினர் மோட்டார் சைக்கிள்கள் சகிதம் கொழும்பு, புறக்கோட்டை, மிரிஹான, கிருலப்பனை மற்றும் கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளில் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்தது. இவ்வாறு இராணுவத்தினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் காணொளிகள் பல சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றது.
இந்நிலையில்,நாட்டில் தற்போதைய நிலைவரம் முழுமையாக கண்காணிக்கப்பட்டு அதன் அடிப்படையில் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை நீக்குவதா ? அல்லது நீடிப்பதா என்பது தீர்மானிக்கப்படும் என பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நாட்டில் வன்முறைகள் பாரதூரமானால் அவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் இராணுவத்திற்கு வழங்கப்படுமே தவிர , அது ஒருபோதும் இராணுவ ஆட்சியாக மாறாது என்றுபாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.
இதேவேளை, மக்களின் பாதுகாப்பிற்காகவே இராணுவத்தினர் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். எனவே அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
