கண்டதும் சுட உத்தரவு பிறப்பித்த இலங்கை! அரசு அதிரடி முடிவு!

0
535

பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிப்பவர்களைக் கண்டால் சுடுவதற்கு இலங்கை அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இலங்கையில் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியின் காரணமாக வன்முறை எதிர்ப்புகளுக்கு மத்தியில் பொதுச் சொத்துக்களைச் சூறையாடுபவர்கள் அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துமாறு இராணுவம், விமானப்படை மற்றும் கடற்படை வீரர்களுக்கு இலங்கையின் பாதுகாப்பு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.

சக குடிமக்களுக்கு எதிரான “வன்முறை மற்றும் பழிவாங்கும் செயல்களை” நிறுத்துமாறு மக்களை வலியுறுத்திய அந்நாட்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ , நாடு எதிர்கொள்ளும் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியை நிவர்த்தி செய்வதாக உறுதியளித்ததை அடுத்து இந்த உத்தரவு வந்துள்ளது.

இலங்கையின் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) கமல் குணரத்ன ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் வன்முறையில் ஈடுபட வேண்டாம் என்றும் வலியுறுத்தினார். கொள்ளை மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதம் தொடர்ந்தால், மீறுபவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பாதுகாப்பு அமைச்சகம் கட்டாயப்படுத்தப்படும் என்று அவர் எச்சரித்தார்.

“வன்முறையில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு இளைஞர்களையும் பெண்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்கு தீ வைக்க வேண்டாம், ஜனநாயக மற்றும் அமைதியான முறையில் உங்கள் போராட்டத்தில் ஈடுபடுங்கள்,” என்றார்.

அமைதியான போராட்டங்கள் என்ற போர்வையில் கொள்ளையர்கள் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி குற்றச்செயல்களில் ஈடுபட்டுள்ளதாக எச்சரித்த பாதுகாப்பு செயலாளர், இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை எனவும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் அவரது குடும்பத்தினர் தஞ்சம் அடைந்துள்ளதாக கூறப்படும் திருகோணமலை கடற்படை முகாமிற்கு வெளியே அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், பாதுகாப்பு செயலாளர் கடுமையான எச்சரிக்கை விடுதிட்டுள்ளார்.

அமைதியான நடத்தை குறித்து இளைஞர்களுக்கு ஆலோசனை வழங்குமாறும் குணரத்ன மதத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

இதற்கிடையில், திங்கட்கிழமை அன்று அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்கள் தாக்கியதைத் தொடர்ந்து வெடித்த வன்முறையில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8-ஆக உயர்ந்தது.

76 வயதான மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த போதிலும் அமைதியை ஏற்படுத்த முடியவில்லை. மகிந்த ராஜபக்சவின் இளைய சகோதரரான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை ராஜினாமா செய்யுமாறு அரசாங்கத்திற்கு எதிரான போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொழும்பு மற்றும் நாட்டின் மற்ற பகுதிகளில் இடம்பெற்ற வன்முறைகளில் 250 பேர் காயமடைந்துள்ளனர்.