மீண்டும் விஷமான ஷவர்மா: சிகிச்சையில் மாணவர்கள்

0
626

கேரளாவைச் சேர்ந்த மாணவி தேவாநந்தா ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் தமிழகத்தில் கால்நடை கல்லூரி மாணவர்கள் சாப்பிட்டு தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அசைவ பிரியர்களுக்கு பிடித்த ஷவர்மா

இன்று அசைவ பிரியர்களின் மிகவும் பிடித்தமான உணவாக மாறியுள்ளது ஷவர்மா. கம்பியில் பச்சை இறைச்சியை குத்தி வைத்து மசால் தடவி வைக்கின்றனர். 

சில தினங்களுக்கு முன்பாக கேரளாவைச் சேர்ந்த தேவானந்தா(16) என்ற சிறுமி சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உடல் நிலை பாதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குறித்த சிறுமியின் இறப்பிற்கு சிக்கனில் ஷிகெல்லா என்ற பாக்டீரியா இருந்ததே காரணம் என்று கண்டறியப்பட்டது.

இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல ஷவர்மா கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதுடன், சில கடைகளுக்கு நோட்டீஸும் அதிகாரிகளால் அனுப்பப்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் மருத்துவமனையில் மாணவர்கள்

இந்நிலையில் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் இரவு துரித உணவுகத்தில் ஷவர்மா சாப்பிட்டதில் உணவு ஒவ்வாமை ஏற்பட்டு தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவர்களான பிரவீன், பரிமலேஸ்வரன் , மணிகண்டன் ஆகியோருக்கு உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிக்சைக்காக தற்போது தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மூன்று மாணவர்களுக்கும் தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.