பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி காலமானார்

0
826

பழம்பெரும் நடிகை ரங்கம்மா பாட்டி என்கிற குட்டிமா பாட்டி மரணமடைந்துள்ளார்.

அவருக்கு வயது 91. பிரபல குணசித்திர நடிகை கே.ஆர்.ரங்கம்மாள் என்ற ரங்கம்மா பாட்டி. எம்ஜிஆர் நடித்த ‘விவசாயி’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர், சிவாஜி, கமல்ஹாசன், ரஜினிகாந்த், அஜித், விஜய் உட்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார். வடிவேலுவின் காமெடி ஒன்றில், ‘‘போறது போற.. அந்த நாயை கொஞ்சம் ‘சூ’ன்னு வெரட்டிட்டுப் போ’’ என்று சொல்லும் ரங்கம்மா பாட்டியின் நடிப்பு வரவேற்பை பெற்றது.

தமிழ், மலையாளம், இந்தி உட்பட சுமார் 500 படங்களுக்கு மேல் சிறு வேடங்களில் நடித்துள்ள இவர், கடந்த சில ஆண்டுகளாக வாய்ப்பின்றி வறுமையில் இருந்தார்.

இதனால், சென்னை மெரினா கடற்கரையில் கர்சீப், சோப்பு, பொம்மை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். தனக்கு நடிகர் சங்கம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில நடிகர்கள் இவருக்கு உதவி செய்தனர்.

இந்நிலையில், முதுமை, வறுமை காரணமாக தனது சொந்த ஊரான கோயம்புத்தூர் மாவட்டம் அன்னூர் தெலுங்குபாளையத்துக்கு சென்றார். அங்கு சில நாட்களாக உடல்நலமின்றி இருந்த அவர் நேற்று காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.