திரையில் தெரிந்த 3 வயது சிறுவன்; கண்ணீர் வடித்த உக்ரைனியர்கள்!

0
262

உக்ரைனில் 3 வயது சிறுவன் போருக்கு எதிரான பாடலை பாடிய நிலையில் சிறுவனின் பாடல் லட்சக்கணக்கானோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. உக்ரைன் மீது ரஷியா மேற்கொண்டுள்ள போர் 2 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் பாதுகாப்பிற்காக அண்டை நாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர்.

எனினும் சொந்த மண்ணிலேயே காலம் கடத்த விரும்புபவர்கள் ரஷியாவின் ஆயுதங்களுக்கு உயிரை பறிகொடுக்க வேண்டியிருக்கிறது. உக்ரைனும் ரஷ்யாவுக்கு எளிதில் விட்டு கொடுக்க தயாராக இல்லை. தங்களால் முடிந்த அளவுக்கு ரஷியாவை தடுத்து நிறுத்த போராடி வரும் நிலையில் இரு நாடுகளும் போரை ரஷியா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு வலியுறுத்தி வருகிறது.

போரை முடிவுக்கு கொண்டு வர சர்வதேச அமைப்புகள் மற்றும் நாடுகளால் கூட முடியவில்லை. இந்த நிலையில், போரை நிறுத்த கோரி 3 வயது சிறுவன் பாடியுள்ள பாடல் லட்சக்கணக்கானோரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

உக்ரைனின் கீவ் நகரில் தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய நிகழ்ச்சியில் லியோனார்ட் புஷ் (வயது 3) என்ற சிறுவன், ஒகியான் எல்ஜி என்ற இசை குழுவுடன் சேர்ந்து போருக்கு எதிரான பாடல் ஒன்றை பாடியுள்ளான்.

இர்பின் நகரை சேர்ந்த அந்த சிறுவன் பாடிய பாடல் கீவ் நகர மெட்ரோ ரெயில் நிலையத்தில் உள்ள திரையில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. இதனை கண்டதும் பார்வையாளர்கள் கண்களில் கண்ணீர் வழிந்தோட சிறுவனின் ஆத்மார்த்த குரலை கேட்டபடி நின்றனர்.

தனது பாடலால் லட்சக்கணக்கானோரின் மனங்களில் சிறுவன் லியோ இடம் பிடித்து உள்ளான். அவனது சொந்த நகரின் மீது ரஷிய படைகள் மேற்கொண்ட தாக்குதலை தொடர்ந்து, மேற்கு பகுதிக்கு லியோனார்ட் புஷ் இன் குடும்பம் புலம்பெயர்ந்து சென்றதாக கூறப்படுகின்றது.