ரஷ்யாவில் மழலையர் பாடசாலைக்குள் புகுந்து நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், 2 குழந்தைகள் உள்பட 4 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ரஷ்யாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள உலியானோவ்ஸ்க் பிராந்தியத்தில் மழலையர் பாடசாலை ஒன்றுயுள்ளது. குறித்த பாடசாலையில் நேற்று முன்தினம் (26-04-2022) மதியம் வழக்கம் போல் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது பாடசாலைக்குள் நுழைந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சரமாரியாக சூட்டுள்ளார். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது. பாடசாலையில் இருந்த குழந்தைகள் பயத்தில் அலறி துடித்தனர். இருப்பினும், அந்த மர்ம நபர் சற்றும் ஈவுஇரக்கமின்றி தொடர்ந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார். குறித்த துப்பாக்கிச்சூட்டில் 6 வயதுக்குட்பட்ட 2 குழந்தைகளும், ஆசிரியர் ஒருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதனை அடுத்து தாக்குதலில் ஈடுபட்ட அந்த மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் என்ன? துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் யார்? என்பது குறித்து பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.