கொத்து – பராட்டா உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை மீண்டும் அதிகரிக்கும்

0
269

சமையல் எரிவாயு விலை அதிகரிப்புக்கு அமைய, சிற்றுணவகங்களில் விலை அதிகரிப்பை மேற்கொள்வது குறித்த தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பு அதன் உரிமையாளர்களுக்கே வழங்குவதாக சிற்றுணவக உரிமையாளர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

சமையல் எரிவாயு விலை அதிகரிக்கப்பட்டமையால், தேநீர், பால் தேநீர், உணவுப்பொதி, அப்பம், பராட்டா, கொத்து உட்பட சிற்றுண்டிகளின் விலைகள் அதிகரிக்கும் என கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்டபோது அவர் தெரிவித்துள்ளார்.

ஆனாலும், உணவுப் பொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டால், சிற்றுணவக தொழிற்துறை வீழ்ச்சியடையும். இது பாரிய பிரச்சினையாகும்.

எனவே, சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டதை அடுத்து, தங்களது தொழிற்துறையை முன்னெடுத்துச் செல்லக்கூடிய வகையில் தாங்கள் விரும்பியவாறு விலை அதிகரிப்பை மேற்கொள்ளுமாறு சிற்றுணவக உரிமையாளர்களுக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.

ஏனெனில், தாங்கள் விலை அதிகரிப்பை மேற்கொண்டால், உண்மையில் இந்த தொழிற்துறை வீழ்ச்சியடையும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நேற்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில், லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

2,675 ரூபாவாக காணப்பட்ட 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 2,185 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 12.5 கிலோகிராம் எடைகொண்ட லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனின் புதிய விலை 4,860 ரூபாவாகும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.

1,071 ரூபாவாக காணப்பட்ட 5 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 874 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, 1,945 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

506 ரூபாவாக இருந்த 2.3 கிலோகிராம் எடைகொண்ட சமையல் எரிவாயு கொள்கலனின் விலை, 404 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, 910 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதென லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.