காரைதீவு புத்தாண்டு கலாசார விளையாட்டு விழாவில் கல்வி சாதனையாளர்கள் கௌரவிப்பு

0
421

சுபகிருது சித்திரை வருடப் பிறப்பை முன்னிட்டும், காரைதீவு விளையாட்டுக் கழகத்தின் 39 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டும் காரைதீவு விளையாட்டுக் கழகமும் விபுலாநந்தா சனசமூக நிலையமும் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இணை அனுசரணையுடன் நடத்திய 24 ஆவது மாபெரும் கலாசார விளையாட்டு விழாவில் சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வு மிக சிறப்பாக இடம்பெற்றது.

காலை நிகழ்வான மரதன் ஓட்டமானது கண்ணகி அம்மன் ஆலய முன்றலில் ஆரம்பிக்கப்பட்டு காரைதீவு விளையாட்டு கழக காரியாலயத்தில் நிறைவு பெற்றது.

மாலையில் விபுலானந்த மைதானத்தில் கழகத்தின் தலைவர் வி.அருள்குமரன் தலைமையில் கலாசார விளையாட்டு விழா சிறப்பாக நடைபெற்றது. பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.

காரைதீவு பிரதேச செயலாளர் சிவ.ஜெகராஜன், தவிசாளர் கி.ஜெயசிறில், ஆலோசகர்களான செ.இராமகிருஷ்ணன், வே.இராஜேந்திரன், வே.த.சகாதேவராஜா உள்ளிட்ட அதிதிகளும் கலந்து கொண்டனர்.

கல்வி சாதனையாளர்கள் தங்கப் பதக்கம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இதன் போது உயர்தரப் பரீட்சையில் வைத்தியத் துறைக்கும், பொறியில் துறைக்கும் தெரிவானவர்களும் கலைத்துறையில் 3 ஏ சித்தி பெற்றவர்களும், சாதாரண தரப் பரீட்சையில் 9ஏ சித்தி பெற்ற மாணவர்களும் காரைதீவு விளையாட்டு கழகத்தினரால் மைதானத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டனர். சாதனையாளர் கௌரவிப்பு நிகழ்வில் அதிதிகள், பெற்றோர் கலந்து கொண்டனர்.