மக்கள் முடிவை ஏற்று, அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிப்போம்: மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவிப்பு

0
380

“மக்கள் பக்கம் நின்றே, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரிக்கும் முடிவை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் எடுத்துள்ளது.” என இ.தொ.காவின் தவிசாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மருதபாண்டி ராமேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

அரசுக்கு எதிராக முன்வைக்கப்படவுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் இ.தொ.காவின் நிலைப்பாடு தொடர்பில் ஊடகவியலாளர் தொலைபேசி வாயிலாகக் கேட்ட போது, அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

” நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படும் என அறிவிப்பு விடுத்தவர்களுக்குக் கூட, அது வெற்றிபெறுமா என்ற சந்தேகம் இருந்தது. அதுமட்டுமல்ல உள்ளடக்கங்கள் பற்றி எம்முடன் பேச்சு நடத்தப்படவில்லை.

அதனால் தான் நடுநிலை என்ற அறிவிப்பு விடுக்கப்பட்டது. தற்போது பிரேரணை பற்றி எமக்கு தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அது வெற்றியளிக்கக்கூடிய சாத்தியமும் காணப்படுகின்றது.

பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என்பதுதான் மக்களின் கருத்து. மக்களின் தீர்ப்பே, எமது அரசியல் நடவடிக்கை. அந்த கொள்கையின் அடிப்படையில் செயற்படும் கட்சியே இ.தொ.கா. அன்று முதல் இன்று வரை நாம் தடம்மாறிப் பயணித்தது கிடையாது.

அந்தவகையில் மக்கள் முடிவை ஏற்று, அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிப்போம்.” இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.