அரசாங்கம் அட்டைகள்போல் மக்களை உறிஞ்சுகின்றது – இரா. சாணக்கியன்

0
692

ஜனாதிபதி கோத்தபாயவின் அரசாங்கம் இந்த நாட்டில் அட்டைகள் எவ்வாறு மனிதனிலிருந்து இரத்ததினை உறுஞ்சுமோ அதுபோன்று நாட்டு மக்களை உறிஞ்சும் செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு பாலமீன்மடு,லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் 26வது நிறைவினை முன்னிட்டு “முகத்தூர் முழக்கம்” மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியை பாலமீன்மடு லைட்ஹவுஸ் விளையாட்டு மைதானத்தில் நடாத்தியது. 30இளைஞர் கழகங்கள் பங்குகொண்ட இந்த சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டி நேற்று மாலை நடைபெற்றது.

இறுதிப்போட்டியில் மாமாங்கம் ரட்னம் இளைஞர் கழகமும் சீலாமுனை இளைஞர் கழகமும் மோதிய நிலையில் இரண்டு கழகங்களும் சமமான ஹோல்களை பெற்ற நிலையில் தண்ட உதை மூலம் வெற்றியை தீர்மானிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டன.

இதன்போது 2:4என்ற கோல் கணக்கில் மாமாங்கம் ரட்னம் இளைஞர் கழகம் வெற்றிபெற்று இந்த ஆண்டுக்கான “முகத்தூர் முழக்கம்” சவால் கிண்ணத்தை வெற்றிகொண்டு இந்த ஆண்டுக்கான சம்பியனாக தெரிவுசெய்யப்பட்டது.

இறுதிப்போட்டியானது பாலமீன்மடு லைட்ஹவுஸ் இளைஞர் கழகத்தின் தலைவர் வி.கபில் தலைமையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கலந்துகொண்டார்.

சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் செயலாளர் தே.காந்தன்,மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் சம்மேளன செயலாளர் சி.லவன்ராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது பாலமீன்மடு விளையாட்டுக்கழகம் ஊடாக விளையாட்டுத்துறைக்கு பங்காற்றியவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் வெற்றிபெற்ற அணிகளுக்கான வெற்றிக்கிண்ணங்களும் வழங்கிவைக்கப்பட்டன.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர், கோத்தபாய ராஜபக்ஸவின் அரசாங்கம் நாட்டில் அட்டைகள் எவ்வாறு இரத்தத்தினை உறிஞ்சி எடுக்குமோ அதேபோன்று இந்த நாட்டு மக்களின் நிதியை களவெடுத்து,நாட்டு மக்களுக்கு சொந்தமான வளங்களை விற்பனை செய்து,இந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான அந்நிய செலாவாணியை கொண்டு நாடுகளின் கடனை செலுத்துவதாக கூறி தனது குடும்பத்தின் கடன்களை அடைக்கும் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த நாட்டில் கோத்தபாய ராஜபக்ஸ ஜனாதிபதியாக வரும்போது கையிருப்பாக இந்த நாட்டில் 06பில்லியன் அமெரிக்க டொலர் இருந்துள்ளது.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி வரப்போகின்றது,பொருட்களுக்கான தட்டுப்பாடு வரப்போகின்றது என்று தெரிந்தும் இந்த அந்நிய செலவாணியை பயன்படுத்தி அந்த கடனை அடைப்பதற்கான காரணம் அவரின் குடும்பத்தின் வேண்டப்பட்டவருக்கே அந்த நிதியை வழங்கியதான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுவருகின்றது.

ஆனால் இன்று மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்,இரண்டு இராஜாங்க அமைச்சர்கள் கிடைத்துள்ளார்கள்.நிதியே இல்லாத நாட்டுக்கு ஒரு அமைச்சர்.சிங்கள அமைச்சர்களே இன்று அமைச்சு வேண்டாம் என்று கூறுமளவிற்கு அரசிடம் நிதியில்லாத நிலை காணப்படுகின்றது.

இந்த மிகவும் மோசமாக விமர்சிக்கப்படும் ஜனாதிபதியாக கோத்தபாய இருக்கின்றார்.வெட்கம்,சூடு,சொறனை இருக்கும் ஓரு ஜனாதிபதி மீண்டும் இந்த நாட்டில் ஜனாதிபதியாக இருக்கமுடியாது. சிங்கள மக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்டவர்களே அமைச்சு பதவிகள் வேண்டாம் என்று விட்டுவரும்போது எம்மவர்கள் எதற்காக அமைச்சு பதவிகளை எடுக்கவேண்டும்.

நான் பாராளுமன்றத்தில் 5000ரூபா பணத்தாளை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் முன் காட்டி பேசியபோது நான் சுயாதீனமாக மக்களுக்காக செயற்படப்போவதாக கூறியவர் இருவாரங்கள் கழிவதற்குள் அமைச்சுப்பதவியை எடுத்துவந்துள்ளார்.அப்போது நான் 5000ரூபா வழங்கியது சரிதான்.அமைச்சுப்பதவியும் இரண்டு மில்லியன் அமெரிக்க டொலர்களும் வழங்கியதாக கூறப்படுகின்றது.

இந்த கோத்தபாய ராஜபக்ஸ அரசாங்கம் இலங்கையில் உள்ள மக்களை தங்களது தவறான வழிநடத்தல்களினால்,தவறான தீர்மானங்களினால் இந்த நாட்டின் பொருளாதாரத்தினை அழித்து அடுத்தவேளைக்கு உணவில்லாத நிலையினை இந்த நாட்டு மக்களுக்கு இந்த அரசாங்கம் ஏற்படுத்தியுள்ளது.