ரஷ்ய நீச்சல் வீரர் சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை! உக்ரைன் போரின் விளைவு!

0
638

ரஷ்ய நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

உக்ரைன் மீது ரஷ்யா போர் 56-வது நாளாக தொடரும் நிலையில் ஏற்கனவே ரஷ்யா மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யவும் பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள் தடை விதித்துள்ளன. அதுமட்டுமின்றி லண்டனில் நடக்கும் விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க ரஷ்யா, பெலாரஸ் நாட்டு வீரர்களுக்கு நேற்று முன்தினம் தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ரஷ்யாவை சேர்ந்த நீச்சல் வீரர் எவ்கெனி ரைலோவுக்கு சர்வதேச நீச்சல் போட்டிகளில் பங்கேற்க தடைவிதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 2 தங்கம் வென்ற இவர் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு ஆதரவு தெரிவித்து பேரணி ஒன்றில் சமீபத்தில் பங்கேற்றார்.

இதனால் அடுத்த 9 மாதங்களுக்கு நீச்சல் போட்டிகளில் பங்கேற்க சர்வதேச நீச்சல் அமைப்பு தடைவிதித்துள்ளது. இதுகுறித்து பேசிய பினா அமைப்பு, ரைலோவை தொடர்ந்து பிற ரஷ்ய மற்றும் பெலாரஸ் வீரர்களை அனைத்து சர்வதேச போட்டிகளில் இருந்து தடை செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளது.