அரச தலைவருக்கு எதிராக களமிறங்கிய ஆசிரியர்கள்!

0
536

வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் மின்வெட்டுக்கு எதிராக பொகவந்தலாவ பிரதேசத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளின் ஆசிரியர்களும் (20) பிற்பகல் பொகவந்தலாவ நகர மையத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பாடசாலை முடிந்ததும், பொகவந்தலாவை நகர மையத்தில் ஆசிரியர்கள் ஊர்வலமாகச் சென்று, தற்போதைய அரசாங்கத்தால் நாட்டை ஆள முடியாது எனவும், தற்போதைய ஆட்சியாளர்கள், நாட்டை ஆளக்கூடிய ஒருவரிடம் நாட்டை ஒப்படைக்க வேண்டும் எனவும், சுலோக அட்டைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள நம்பிக்கை தகர்ந்து போயுள்ளதாகவும், அதற்கமைவாக கோட்டாபய ராஜபக்ஷவும் அரச தலைவர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆசிரியர்களின் போராட்டத்திற்கு ஆதரவாக, பொகவந்தலாவ பிரதேசத்தில் உள்ள தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்றும் நகர மையத்திற்குள் பேரணியாகச் சென்று டயர்களை எரித்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.