வீழ்ந்தது மரியுபோல்… ஒரு ஈ கூட தப்பிக்க முடியாதபடி அடையுங்கள்; புடின் போட்ட கடும் உத்தரவு!

0
358

உக்ரைன் ரஷியா நாடுகளுக்கு இடையேயான போர் 55 நாட்களுக்கும் மேலாக நீடித்து வரும் நிலையில் உக்ரைனின் மரியுபோல் நகரை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக ரஷிய ராணுவம் இன்று அறிவித்து உள்ளது.

இதன் மூலம், ‘மரியுபோல் நகருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளதாக’ ரஷிய அதிபர் புதின் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். போர் தொடங்கியதிலிருந்து, கிழக்கு உக்ரைனில் உள்ள மரியுபோல் நகரை குறிவைத்து நடத்தப்பட்ட ரஷியாவின் கடும் தாக்குதலால் அந்நகரம் உருக்குலைந்து போனது. இந்த நிலையில், மரியுபோல் நகரம், உக்ரைனை விட்டு ‘வெற்றிகரமாக விடுவிக்கப்பட்டதாக’ ரஷியா இன்று அறிவித்தது.

உக்ரேனிய வீரர்கள் தங்கியிருக்கும் அசோவ்ஸ்டல் எஃகு ஆலையைத் தவிர அந்த நகரத்தை முழுமையாக ரஷியா கட்டுப்படுத்துவதாக ரஷியாவின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷோய்கு அறிவித்தார். அவரது அறிவிப்பை தொடர்ந்து, ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin), மரியுபோலின் “வெற்றிகரமான விடுதலையை” பாராட்டியுள்ளார்.

அத்துடன் “ஒரு ஈ கூட, தப்பிக்க முடியாதபடி இந்த தொழிற்பேட்டையை அடைத்துவிடுங்கள். ஆனால், அசோவ்ஸ்டல் எஃகு ஆலையைத் தாக்க வேண்டாம். அங்கிருந்து யாரும் தப்ப முடியாதபடி தடுப்பு நடவடிக்கைகள் மூலம் முற்றுகையிட்டு கைப்பற்றுங்கள்” என்று புதின் (Vladimir Putin) ரஷிய படைகளிடம் அறிவுறுத்தி உள்ளார்.

அதோடு மரியுபோல் ஸ்டீல் தொழிற்சாலை மீதான தாக்குதலுக்குப் பதிலாக அதனை முற்றுகையிட்டு கைப்பற்றுமாறும் புதின் (Vladimir Putin) உத்தரவிட்டுள்ளார்.

அதேவேளை கடந்த 2014ம் ஆண்டு முதல், உக்ரைனை சீர்குலைக்கும் ரஷியாவின் நடவடிக்கையின் மையப் புள்ளியாக, நிலக்கரி மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் கிழக்கு உக்ரைனின் டான்பாஸ் பகுதி இருந்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) இந்த வாரம் ஆற்றிய உரையில், “டான்பாஸ் பகுதியைக் கைப்பற்ற ரஷியா தாக்குதலைத் தொடங்கியுள்ளது. டான்பாஸ்க்கான போர் தொடங்கிவிட்டது” என கூறினார்.

இப்போது மரியுபோல், ரஷியாவின் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதால் இன்னும் புது உத்வேகத்துடன் டான்பாஸ் பகுதியை கைப்பற்ற ரஷியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.