பிரித்தானியாவில் கொரோனா முடக்க நிலை நடைமுறையில் இருந்த போது முடக்கவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் காவல்துறையினரால் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு (Boris Johnson) அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, நேற்று இந்த விடயம் குறித்து நாடாளுமன்றத்தில் அவர் பகிரங்கமாக மன்னிப்புக்கோரியுள்ளார்.
எனினும் இந்த விடயம் குறித்து எதிர்வரும் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்தை நடத்தி பிரதமர் மீது மேலதிக விசாரணைகளை நடத்தவேண்டுமா? என்பதை முடிவு செய்யும் வகையில் வாக்களிப்பு ஒன்றை நடத்த எதிர்க்கட்சியான தொழிற்கட்சி சபாநாயகரிடம் அனுமதி பெற்றுள்ளது.
2020 ஆம் ஆண்டில் இடம்பெற்ற தனது பிறந்தநாள் விழாவில் கொரோனா முடக்க நிலைவிதிகளை மீறிய குற்றச்சாட்டில் பிரதமர் பொறிஸ் ஜோன்சனின் காவல்துறையின் அபராதத்தை பெற்ற நகர்வு இப்போது நாடாளுமன்றத்தில் அவருக்கு நெருக்கடியை வழங்கியுள்ளது.
தான் வேண்டுமென்றே கொரோனா முடக்க நிலை விதிகளை மீறவில்லை என கருத்து தெரிவித்ததுடன், மன்னிப்புக்கோரிய அவர் இந்த விடயத்துக்கு அப்பால் பிரித்தானிய மக்களின் வாழ்க்கைச் செலவு நெருக்கடி மற்றும் உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு போன்ற தீவிரமான பிரச்சினைகளில் கவனம் செலுத்தவேண்டும் என நாடாளுமன்றத்தை கோரியுள்ளார்.