அசாமில் மின்னல் தாக்கத்தால் இம்மாதம் இதுவரை 19 பேர் பலி!

0
683

இந்தியாவின் அசாம் மாநிலத்தில் இந்த மாதம் நேற்று வரையான காலப்பகுதியில் ஏற்பட்ட மின்னல் தாக்கத்தால் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 20 ஆயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.

கடந்த 14ஆம் திகதி முதல் 3 நாட்களில் 1,410 கிராமங்களை உள்ளடக்கிய 22 மாவட்டங்களில் புயல் மற்றும் இடி, மின்னல் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளதாக அசாம் மாநில பேரிடர் முகாமைத்துவ பிரிவு தலைமை செயல் அதிகாரி ஜி.டி. திரிபாதி தெரிவித்துள்ளார்.

கடந்த 14ஆம் திகதி பலத்த வேகத்துடன் புயல் காற்று வீச தொடங்கியது.இடி, மின்னலும் தாக்கியது. இதனால், 95,239 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 22 மாவட்டங்களில், மொத்தம் 1,333 ஹெக்டேர் நிலங்களில் பயிரிடப்பட்டு இருந்த பயிர்கள் சேதமடைந்துள்ளன எனவும் அவர் கூறினார்.

புயலை தொடர்ந்து கனமழையும் பரவலாக பெய்து வருகிறது. இதனால், அசாமில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் அரசு, தனியார் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்தன.

புயலுக்கு தின்சுகியா, திப்ரூகர் உள்ளிட்ட மாவட்டங்களில் மொத்தம் 8 பேர் பலியாகி இருந்தனர். நேற்று மேலும் 6 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் மொத்த பலி எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஏப்ரலில் மட்டும் 19 பேர் உயிரிழந்துள்ளதாகவும் பேரிடர் முகாமைத்துவ பிரிவு தலைமை செயல் அதிகாரி திரிபாதி கூறியுள்ளார்.

நேற்று வரை 3,011 வீடுகள் முழு அளவில் சேதமடைந்துள்ளன. 19 ஆயிரத்து 256 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.