போராட்ட களத்திற்கான விநியோகத்தை தடுத்த நிறுத்த திட்டம்: புரியாணி விநியோகித்தவரை தேடும் சீ.ஐ.டி

0
487

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலிமுகத் திடலில் போராட்டம் நடத்தப்படும் இடத்திற்கு உணவு உட்பட அத்தியவசிய பொருட்களை பெருமளவில் விநியோகிக்கும் நபர்களை கண்டறிய குற்றவியல் விசாரணை திணைக்களம் நடவடிக்கை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகிறது.

இதனடிப்படையில் அண்மையில் போராட்டகாரர்களுக்கு புரியாணியை விநியோகித்ததாக கூறப்படும் கனேடிய கடவுச்சீட்டை கொண்டுள்ள அரவிந்தன் ராசநாயகம் என்பவரை குற்றவியல் விசாரணை திணைக்களம் தேடி வருவதாக கூறப்படுகிறது.

தனது துணைவியின் வழியாக அவர் கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்துள்ளதாகவும் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டு காலத்தில் நடந்ததாக கூறப்படும் பண சலவை சம்பந்தமான குற்றச்சாட்டு தொடர்பில் அவருக்கு எதிராக சர்வதேச பொலிஸார் பிடியாணை பிறப்பித்துள்ளதாக பேசப்படுகிறது.

இந்த விடயத்தை அடிப்படையாக கொண்டு சம்பந்தப்பட்ட நபரை கைது செய்ய குற்றவியல் விசாரணை திணைக்களத்தினர் தயாராகி வருகின்றனர்.

எது எப்படி இருந்த போதிலும் தமது எதிர்ப்பு போராட்டத்தை சீர்குலைக்கும் திட்டமாக போராட்ட களத்திற்கு கிடைத்து வரும் விநியோகத்தை நிறுத்தவும் மக்களை அச்சுறுத்தும் உள்நோக்கத்திலும் அரசாங்கம் இதனை மேற்கொண்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது என போராட்ட களத்தில் உள்ள அதன் ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.