மசூதி வளாகத்தில் நுழைந்த இஸ்ரேல் பொலிஸ்: வெடித்த கலவரம்

0
521

ஜெருசலேமின் பழைய நகரத்தில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குள் இஸ்ரேலிய பொலிசார் யூத மக்களுக்கு வழி வகுக்கும் வகையில் நுழைந்த நிலையில் கலவரம் வெடித்துள்ளது.

குறித்த கலவர சம்பவத்தில் 17 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளனர் என பாலஸ்தீனிய மருத்துவ ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

ஜெருசலேமில் இஸ்ரேல் பாதுகாப்புப் படையினருக்கும் பாலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே ஒரு வருடத்திற்கு முன்பு நடந்த வன்முறை சம்பவமானது 11 நாட்கள் நீடித்த காசா போராக மாறியது.

அல்-அக்ஸா மசூதியானது இஸ்லாமியர்களுக்கு மூன்றாவது புனிதமான பகுதியாகும். ஆனால் குறித்த பகுதியே யூதர்களுக்கும் புனிதமான இடமாகும். இருவரும் தங்களுக்கான புனிதமான இடம் என உரிமை கொண்டாடுவதால் தொடர்ந்து அமைதியின்மை காணப்படுக்கிறது.

இந்த நிலையில், இந்த ஆண்டு கிறிஸ்தவர்களுக்கு ஈஸ்டர் பண்டிகையும், இஸ்லாமியர்களுக்கு ரமதான் மாதம் மட்டுமின்றி யூதர்களுக்கு ஒருவார காலம் நீளும் முக்கிய பண்டிகையும் ஒரு சேர அமைந்துள்ளது.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் ஜெருசலேமுக்கு வருகை தந்துள்ளனர். இஸ்ரேல் பொலிசார் பாலஸ்தீனியர்களை குற்றஞ்சாட்டியுள்ள நிலையில் பாலஸ்தீனியர்கள் இஸ்ரேல் மக்களை குற்றஞ்சாட்டியுள்ளனர்.

புனித தலத்திற்கு யூதர்களின் வழக்கமான வருகையை எளிதாக்குவதற்காக அவர்கள் வளாகத்திற்குள் நுழைந்ததாக பொலிசார் தெரிவித்தனர். ஆனால் வன்முறையை எதிர்பார்த்து பாலஸ்தீனியர்கள் கற்களை குவித்து தடுப்புகளை அமைத்துள்ளதாக பொலிசார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

பாலஸ்தீனியர்கள் மசூதி வளாகத்திற்கு வெளியே இஸ்ரேலிய காவல்துறையினருடன் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் பாலஸ்தீனியர்கள் பழைய நகரத்திற்கு வெளியே பேருந்துகள் மீது கற்களை வீசியதாக காவல்துறை கூறியுள்ளது.

இதனிடையே, பேருந்தில் பயணம் செய்த 5 பேர் சிறு காயங்களுக்கு சிகிச்சை பெற்றதாக அவசர மருத்துவ உதவிக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். 17 பாலஸ்தீனியர்கள் காயமடைந்துள்ளதாகவும், இதில் ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பாலஸ்தீனிய ரெட் கிரசண்ட் மருத்துவ சேவை தெரிவித்துள்ளது.