அவுஸ்ரேலியாவில் தமிழருக்கு விதிக்கப்பட்ட அபராதம்

0
389

தற்காலிக விசாவிலிருந்தபடி சொத்துக்களை வாங்கியதன் மூலம், அவுஸ்ரேலியாவின் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சட்டத்தை மீறினார் என்ற குற்றச்சாட்டின்பேரில் தமிழர் ஒருவருக்கு அவுஸ்ரேலிய பெடரல் நீதிமன்றம் இரண்டரை லட்சம் டொலர்கள் அபராதத்தை விதித்துள்ளது.

மெல்பேனைச் சேர்ந்த வி.பாலசுப்ரமணியன் என்பவருககே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு தற்காலிக விசாவுடன் அவுஸ்ரேலியாவுக்கு குடிபெயர்ந்த பாலசுப்ரமணியன், 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்கும் 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குமிடையில், மெல்பேனில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தச் சொத்துக் கொள்முதல்கள் குறித்து, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீளாய்வுச் சபையிடமிருந்து (Foreign Investment Review Board) அனுமதி பெறாத காரணத்தினால், பாலசுப்ரமணியன், வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கான சொத்துக் கொள்முதல் சட்ட விதிகளை ஆறு தடவைகள் மீறினார் என்று அவுஸ்ரேலிய வரித்திணைக்களத்தினால், (ATO) அவுஸ்ரேரேலிய பெடரல் நீதிமன்றத்தின் கவனத்துக்கு தெரியப்படுத்தப்பட்டது.

இது குறித்த வழக்கினை விசாரித்த பெடரல் நீதிமன்ற நீதிபதி Jonathan Beach, வரித்திணைக்களத்தின் கூற்றினை ஏற்றுக்கொண்டு, பாலசுப்ரமணியனிற்கு அபராதம் விதித்தார்.

 அதாவது, சட்டவிரோதமாக வாங்கப்பட்ட சொத்துக்களின் மூலதன ஆதாயமான (capital gain) ஏழு லட்சத்து 31 ஆயிரத்து 300 டொலர்களில், இரண்டரை லட்சம் டொலர்களை அபராதமாகச் செலுத்துமாறு நீதிபதி உத்தரவிட்டார். அத்துடன், வரித்திணைக்களத்தின் சட்டச் செலவினையும் பாலசுப்ரமணியன் செலுத்தவேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

வெளிநாட்டவர்களுக்கான முதலீட்டுக் கட்டுப்பாட்டு விதிகளை மீறினார் என்ற குற்றச்சாட்டில் அவுஸ்ரேரேலியாவில் அபராதம் விதிக்கப்பட்ட முதலாவது நபர் பாலசுப்ரமணியன் என்பது குறிப்பிடத்தக்கது.