வன்னிப் பிரதேச பாடசாலை ஒன்றில் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை

0
419

கல்வியியற் கல்லூரிகளை முடித்த வட மாகாண ஆசிரியர்களுக்கு வடக்கில் நியமனம் இல்லை எனவும் இது திட்டமிட்ட செயற்பாடு, இதனை வன்மையாகக் கண்டிப்பதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.

இவ் விடயம் தொடர்பில் அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,

“வடக்கு மாகாணத்தில் உள்ள வன்னிப் பிரதேச பாடசாலைகளில் பெருமளவான ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

அங்கு கடமையாற்றும் வெளி மாவட்ட ஆசிரியர்கள் தமது சேவைக்காலத்தை நிறைவு செய்து, அவர்களில் பலருக்கு இடமாற்றமும் வழங்கப்பட்டு விட்டது.

இந்நிலையில் இன்னும் வன்னிப்பிரதேசத்தில் ஆசிரிய பற்றாக்குறை அதிகரித்த நிலையில் வடக்கு மாகாணத்தை சொந்த வாழ்விடமாக உள்ள ஆசிரியர்களை அவர்கள் அறியாத தென்பகுதி ஊர்களுக்கு நியமிப்பதன் நோக்கம் என்ன.

இது ஒரு இனவாத அல்லது பழி தீர்க்கும் கருமமாகவே பார்க்கிறோம். தயவு செய்து இப்போதுள்ள நாட்டுச் சூழ்நிலையில் அவர்களை அவர்களது சொந்த மாகாணத்தில் கடமையாற்ற அனுமதியுங்கள்.

இங்குள்ள வெற்றிடத்தை நிரப்புங்கள். இதுபற்றி வடக்கு மாகாணம் சார்ந்த அரசியல் தலைவர்கள் சுட்டிக் கதைக்க வேண்டும்“ என அச் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.