இந்திய ஜார்கன்ட் மாநிலம் தியோகர மாவட்டத்தில் அமைந்துள்ள சிவபெருமானின் 12 ஜோதிலிங்க கோயில்களில் ஒன்றான பாபா வைத்யநாத் கோயிலுக்கு செல்லும் கேபில் ஊர்திகள் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகியுள்ளது
இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானதுடன் 12 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள் மற்றும் அடியார்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் கேபிள் ஊர்தி வசதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள கேபிள் ஊர்திகள் திட்டம் இதுவாகும்.
1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைக்கப்பட்டுள்ள இந்த கேபிள் ஊர்தி திட்டம் 766 மீட்டர் நீளம் கொண்டது.
இந்தநிலையில் நேற்று முன்தினம் இதில் ஊர்தி ஒன்றின் மூலம் கோவிலுக்கு சென்ற சுமார் 48க்கும் அதிகமானோரே இந்த அதிர்ச்சி சம்பவத்தில் சிக்கினர்.
ஊர்தி மலை உச்சியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.
இதனால், அனைத்து கேபிள் ஊர்திகளும் நடு வழியில் 100 அடி உயரத்தில் நின்று விட்டன. இதனையடுத்து 2 உலங்கு வானூர்திகளில் சென்ற வான் படையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து 44 மணி நேர மீட்புப் பணியில் இதுவரை 40 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்
விபத்து ஏற்பட்ட கேபிள் ஊர்தியில் பயணம் செய்தபோது அதிலிருந்த பயணி ஒருவர் எடுத்த காணொளியில் இந்த காட்சி பதிவாகியுள்ளது