ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் இன்னும் மிதக்கும் நிலையில் உள்ளது: ரஷ்யா அறிவித்தல்

0
393

 உக்ரைனின் ஏவுகணை தாக்குதலுக்கு உள்ளானதாக கூறப்படும் மொஸ்க்வா என்ற ரஷ்யாவின் ஏவுகணை கப்பல் மூழ்கிக்கொண்டிருப்பதாக உக்ரைன் இராணுவம் கூறுகிறது

எனினும் மொஸ்க்வா இன்னும் மிதக்கும் நிலையில் உள்ளது என்று ரஷ்ய இராணுவத்தினர் அறிவித்துள்ளனர்.

உக்ரைன் படையினரின் நெப்டியூன் ஏவுகணைகளால் தாக்கப்பட்ட பின்னர் ரஷ்ய கப்பல் மூழ்கத் தொடங்கியதாக உக்ரைனிய இராணுவம் கூறுகிறது.

உக்ரைன் தெற்கு இராணுவக் கட்டளையின் தகவல்படி, கப்பலுக்கு கணிசமான சேதம் ஏற்பட்டதாகவும் தாக்குதலின் பின்னர் கப்பல் தீப்பற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

எனினும் மொஸ்க்வா கப்பலில் ஏற்பட்ட தீ கட்டுக்குள் உள்ளது என்றும் தீப்பிழம்புகள் எதுவும் தெரியவில்லை என்றும் வெடிமருந்து பொருட்கள் வெடிக்கவில்லை எனவும் ரஷ்யா தெரிவித்துள்ளது.

மொஸ்க்வா இன்னும் மிதக்கிறது.

அத்துடன் முக்கிய ஏவுகணை ஆயுதக் களஞ்சியம் சேதமடையவில்லை.

இந்தநிலையில் கப்பலில் இருந்து 500 படையினரும் கருங்கடலில் தரித்திருந்த கடற்படைக் கப்பல்களுக்கு வெளியேற்றப்பட்டனர்.

அத்துடன் கப்பலை துறைமுகத்திற்கு இழுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று ரஷ்யா கூறியுள்ளது.

தீ விபத்துக்கான காரணங்கள் தற்போது கண்டறியப்பட்டுள்ளன என்று ரஷ்யா அறிவித்துள்ளது.

எனினும் உக்ரைனின் தாக்குதலா இதற்கான காரணம் என்பதை ரஷ்யா இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை