ஐ.பி.எல் போட்டிகளை விட்டுவிட்டு தாய்நாட்டிற்கு வந்து போராடுங்கள்! இலங்கை வீரர்களுக்கு வலியுறுத்தியுள்ளார் அர்ஜுனா ரணதுங்கா

0
532

ஐ.பி.எல் போட்டிகளில் விளையாடி வரும் இலங்கை வீரர்களை சொந்த நாட்டுக்கு வருமாறு வலியுறுத்தியுள்ளார் அர்ஜுனா ரணதுங்கா.

இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. இதனால் அதிபர் கோட்டாபய அரசுக்கு எதிராக அங்கு மக்கள் போராட்டம் நாளுக்குநாள் வலுத்து வருகிறது. இந்நிலையில், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடியை முன்னிட்டு ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் நாடு திரும்ப, அர்ஜுன ரணதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் கூறுகையில், அதிகளவு தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட இலங்கை வீரர்கள் சிலர் தங்கள் நாட்டில் நிலவும் பிரச்சனைகள் குறித்து தைரியமாக பேசவில்லை. அவர்கள் யாரென்றால்லாம் எனக்கு தெரியாது. துரதிர்ஷ்டவசமாக, அரசுக்கு எதிராக பேசுவதற்கு இந்த கிரிக்கெட் வீரர்கள் பயப்படுகிறார்கள்.

எனினும், சில இளம் கிரிக்கெட் வீரர்கள், தானாக முன் வந்து போராட்டத்திற்கு ஆதரவாக அறிக்கைகள் வழங்கியுள்ளனர். ஏதாவது தவறு நடந்தால், உங்கள் வேலையைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், அதை எதிர்த்துப் பேச அவர்களுக்கு தைரியம் இருக்க வேண்டும்.

ஐ.பி.எல்லில் விளையாடும் வீரர்கள் யார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும் என்று நான் நம்புகிறேன். நான் யார் பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை. ஆனால் அந்த வீரர்கள் ஒரு வாரத்திற்கு, தங்களது ஐபிஎல் போட்டிகளை விட்டுவிட்டு போராட்டங்களுக்கு ஆதரவாக நாட்டிற்கு திரும்ப வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார்.