மட்டக்களப்பு – ஏறாவூர்ப்பற்று வெற்றிடத்திற்கு புதிதாக நால்வர் தெரிவு

0
432

மட்டக்களப்பு  – ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையில் காணப்பட்ட வெற்றிடங்களுக்கு புதிதாக நால்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு, மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் எம். பி. எம். சுப்யான் தெரிவித்துள்ளார்.

புதிய உறுப்பினர்களின் பதவியேற்பு வைபவம் சனிக்கிழமை 09.04.2022 ஏறாவூர் நகர சபை மண்டபத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் அமைச்சருமான எம்.எஸ். சுபைர் தலைமையில் இடம்பெற்றது.

புதிய உறுப்பினர்கள் நால்வரினதும் பெயர்கள் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 06ஆம் திகதி வெளியான வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன் பிரகாரம் ஏறாவூர் நகர சபையின் உறுப்பினராகவும் அச்சபையின் பிரதித் தவிசாளராகவும் செயற்பட்ட மீராலெப்பே ரெபுபாசத்தின் உறுப்பினர் பதவிக்குப் பதிலாக மீராஸாஹிபு அப்துல் கபூர் மற்றும் உறுப்பினரான அலியார் பாத்திமா பஜிகாவிற்குப் பதிலாக அப்துல் மஜீத் சப்ரா ஆகியோரும்,ஏறாவூர்ப்பற்று பிரதேச சபையின் ஐயங்கேணி முஸ்லிம் வட்டார உறுப்பினரான எம். எஸ். முஹம்மது ஜவ்பர் என்பவரின் வெற்றிடத்துக்கு அலியார் றஹமா பீபீ ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேற்படி பழைய உறுப்பினர்கள் மூவரையும் கட்சி உறுப்புரிமையில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீக்கியதால் அவர்கள் உள்ளுராட்சிமன்றங்களில் வகித்த உறுப்பினர் பதவியை இழந்தனர். 

மேற்படி பழைய உறுப்பினர்கள் மூவரையும் கட்சி உறுப்புரிமையில் இருந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீக்கியதால் அவர்கள் உள்ளுராட்சிமன்றங்களில் வகித்த உறுப்பினர் பதவியை இழந்தனர்.

இதேவேளை மட்டக்களப்பு மாநகர சபையின் 16ஆம் இலக்க மஞ்சந்தொடுவாய் வட்டார உறுப்பினர் முஹம்மட் உசனார் முஹம்மட் நிப்லார் என்பவர் அனுமதி பெறாது தொடர்ச்சியாக மூன்று சபைக் கூட்டங்களுக்குச் சமுகமளிக்காத காரணத்தினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு அப்துல் காதர் முஹம்மட் லத்தீப் நியமிக்கப்பட்டுள்ளார் என்று மட்டக்களப்பு மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்தின் தெரிவத்தாட்சி அலுவலர் சுப்யான் அறிவித்துள்ளார்.

புதிய உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண பதவியேற்பு வைபவத்தில் ஏறாவூர் நகர சபைத் தலைவர் எம்.எஸ். நளிம் செயலாளர் எம்.எச்.எம். ஹமீம் உட்பட அலுவலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.