கொள்வனவு கட்டளைகள் நிறுத்தம்: தேயிலை மற்றும் ஆடை உற்பத்திகள் இந்திய சந்தைக்கு

0
491

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக சர்வதேச ரீதியாக இலங்கைக்கு வழங்கப்பட்டு வந்த பெருமளவிலான ஆடை மற்றும் தேயிலை கொள்வனவு கட்டளைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இந்த கொள்வனவு கட்டளைகளில் பெரும்பாலானவை இந்திய சந்தைக்கு சென்றுள்ளதாக த இக்கனோமிக் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது. தினமும் நீண்ட நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதன் காரணமாக ஆடை உற்பத்திகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தேயிலை கொழுந்தின் தரமும் குறைந்துள்ளது. இந்த நிலைமை காரணமாக எதிர்காலத்தில் மேலும் பாரதூரமான நெருக்கடியை இலங்கை எதிர்நோக்க நேரிடும் என பொருளாதார நிபுணர்கள் கூறியுள்ளனர்.  

இலங்கை தேயிலை மற்றும் தைத்த ஆடைகளை ஏற்றுமதி செய்வதன் மூலம் வருடாந்தம் பல பில்லியன் டொலர்களை வருவாயாக ஈட்டி வந்துள்ளது. ரஷ்யா, உக்ரைன் போன்ற நாடுகளுக்கு தேயிலை அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன.

அந்நாடுகளுக்கு இடையில் ஏற்பட்ட போர் காரணமாக தேயிலை ஏற்றுமதியிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் ஐரோப்பிய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து தைத்த ஆடைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் எரிசக்தி நெருக்கடி காரணமாக ஆடை உற்பத்தி தொழிலும் பாதிக்கப்பட்டுள்ளது.