சட்டவிரோத மரக்கடத்தலின் போது பலர் தப்பி ஓட்டம் : பொலிஸார் கடிகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி

0
547
முல்லைத்தீவு - பெரிய இத்திமடு பகுதியில் சட்டவிரோதமான முறையில் தேக்குமரங்கள் வெட்டப்படுவதாக கிடைத்த தகவலுக்கமைய சந்தேக நபர்களைக் கைது செய்யச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கடி காயங்களுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பெரிய இத்திமடு பகுதியில் நேற்று சட்டவிரோதமான முறையில் தேக்குமரங்கள் வெட்டப்படுவதாக ஒட்டுசுட்டான் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் சட்டவிரோதமான முறையில் தேக்குமரங்களை வெட்டி கொண்டிருந்தவர்களை சுற்றிவளைத்துள்ளார்கள்.

இதன்போது பலர் தப்பி ஓடிய நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது கைது செய்யப்பட்டவரின் மனைவி, கணவனைக் கைது செய்த பொலிஸாரை கடித்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தினை பயன்படுத்தி கணவன் தப்பி ஓடிய நிலையில், பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தமை மற்றும் பொலிஸாரை கடித்த குற்றச்சாட்டில் குடும்ப பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் மரக்கடத்தல் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

கடி காயங்களுக்கு உள்ளான பொலிஸ் உத்தியோகத்தர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒட்டுசுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும், கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதாக ஒட்டுசுட்டான் பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.