‘மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு ஒன்றிணையுங்கள்’ – செல்வராஜா கஜேந்திரன்

0
339

மே-18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னெடுக்க ஒன்றிணையுங்கள் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

”தமிழ் மக்கள் மீது இடம்பெற்றது ஒரு திட்டமிட்ட இன அழிப்பு. அந்த இனவழிப்பிற்கு சர்வதேச நீதி வேண்டும் என்பதனை வலியுறுத்துகின்ற நோக்கத்திற்காகவும் மே-18 நினைவேந்தல் நிகழ்வானது உணர்வுபூர்வமாக யுத்தம் நிறைவடைந்த பின்னர் தமிழ் மக்களால் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.

அரச பயங்கரவாதத்தால் முன்னெடுக்கப்பட்ட இன அழிப்புப் போராட்டத்தில் லட்சக்கணக்கான மக்கள் இனப் படுகொலை செய்யப்பட்டதோடு யுத்தம் மௌனித்த 2009 மே மாதம், முள்ளிவாய்க்கால் வரை 5 லட்சம் மக்கள் சென்றிருந்தார்கள்.

இவ்வாறான நிலையில் தான் மே மாதம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஒவ்வொரு வருடமும் தமிழ் மக்களால் நினைவு கூறப்படுகின்றது. என்ன நோக்கத்துக்காக மக்கள் தமது உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த நோக்கங்களை அடைவதற்காக ஒன்றிணைந்து நினைவுகூறக்கூடிய ஒரு நாளாகக் காணப்படுகின்றது. எனவே உயிரிழந்த எமது மக்களை, உறவுகளைக் கூட்டாக நினைவுகூர வேண்டிய கடப்பாடு காணப்படுகின்றது.

அந்த உறவுகள் கடைசி வரை எந்த இலட்சியத்துக்காக உறுதியாக இருந்தார்களோ அந்த இலட்சியத்திற்காகச் செயற்பட வேண்டிய கடப்பாடும் எங்களுக்குக் காணப்படுகின்றது. இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும்.

அந்த நீதியானது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் ஊடாக பெறப்பட வேண்டும். அத்தோடு இறுதி யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டுமாக இருந்தால் ஒற்றையாட்சி மற்றும் 13ஆவது திருத்தச்சட்டத்தை நிராகரித்து சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நீதி பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

எமது எதிர்வரும் மாதம் இடம்பெறவுள்ள முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வினை அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுத்த முன்வாருங்கள்” என தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் அலுவலகத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.