இலங்கையில் கடும் பொருளாதார வீழ்ச்சியால் இந்தியாவிற்கு அகதிகளாக செல்லும் இலங்கையர்கள்!

0
409

மன்னாரில் இருந்து மேலும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கடல் வழியாக அகதிகளாக தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

மன்னார் முத்தரிப்புத்துறையை சேர்ந்த ஒரே குடும்பத்தில் 4 பேர் இன்று வெள்ளிக்கிழமை (8) அதிகாலை தனுஷ்கோடியை சென்றடைந்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை (7) இரவு மன்னார் மாவட்டம் முத்தரிப்புத்துறை பகுதியை சேர்ந்த கிஷாந்தன் (34), ரஞ்சிதா (29), ஜெனீஸ்டிக்கா (10),மற்றும் இரண்டரை வயது சிறுவன் ஆகாஷ் ஆகிய ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் படகு ஒன்றில் புறப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (8) அதிகாலை சுமார் 2 மணி அளவில் தனுஷ்கோடி அரிச்சல் முனை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு ராமேஸ்வரம் மெரைன் பொலிஸார் சென்று இலங்கைத் தமிழர்களை மீட்டு மண்டபம் மெரைன் பொலிஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதன்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக ஏற்பட்டுள்ள அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெண்ணெய், டீசல்,பெட்ரோல் உள்ளிட்ட பொருட்கள் தட்டுப்பாடு அதிகரித்துள்ளதால் தமிழகத்துக்கு அகதிகளாக வந்தாக பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் நடத்திய விசாரணையில் இலங்கை தமிழர்கள் தெரிவித்துள்ளனர்.

பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்கு பின் நான்கு இலங்கை தமிழர்களும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கபடுவார்கள் என மெரைன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அண்மையில் மன்னார் மற்றும் வவுனியாவைச் சேர்ந்த 3 குடும்பங்களை சேர்ந்த 12 பேர் கடல் வழியாக தனுஷ்கோடிக்கு சென்றிருந்தனர்.

தமிழகத்திற்கு அகதிகளாக சென்ற அவர்கள் மண்டபம் அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு இலங்கை தமிழர்கள் இந்தியாவுக்கு அகதிகளாக வரக்கூடும் என்பதால் சர்வதேச கடல் எல்லை பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என இந்திய கடலோர பாதுகாப்பு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.