இளைஞர்களின் பேச்சால் கண்கலங்கிய அதிகாரி – நெகிழ வைத்த சம்பவம்

0
535

குருநாகலில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்த போது கடமையில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ஒருவர் இளைஞர்களின் உணர்ச்சிகரமான பேச்சால் கண்கலங்கினார்.

இந் நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

குருநாகலில் உள்ள பிரதமரின் ஒருங்கிணைப்பு அலுவலகத்திற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாகச் சென்றனர், ஆனால் காவல்துறையினர் வீதித் தடைகளை அமைத்து தடுத்தனர்.

இதனை தொடர்ந்து, நாங்களும் உங்கள் பிள்ளைகள் போன்று தான் எங்கள் எதிர்காலத்திற்காக போராடுகிறோம் என தங்கள் இன்னல்களை காவல்துறையினருக்கு எடுத்துக்காட்டினார்கள்.

ஒரு குறிப்பிட்ட எதிர்ப்பாளர், பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்தால் தாங்கள் எதிர்கொள்ள வேண்டிய இன்னல்களை விளக்கினார், ஒருவர் தனது சேமிப்பு முழுவதையும் கடவுச்சீட்டை உருவாக்கச் செலவழித்த பின்னர் விமான டிக்கெட் விலை 27% உயர்த்தப்பட்டதை தொடர்ந்து தனது வெளிநாட்டுப் பயணக்கனவு கலைந்து போனதை குறித்து எடுத்துரைத்தார்.

கூட்டத்தை கலைக்க பலத்தை பயன்படுத்துவதை விட,  எங்கள் போராட்டத்திற்கு ஆதரவளித்து உங்கள் பிள்ளைகளுக்காகவும் போராடுங்கள் என இளைஞர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

அங்கு கடமையில் இருந்த காவலாளி ஒருவர் இளைஞர்கள் படும் துயரங்களை கேட்டு கண்கலங்கினார். அதிகாரி கண்ணீர் விடுவதை அவதானித்த இளைஞர்கள் நீங்களும் எங்கள் தந்தை போன்று தான் என அவரை அரவணைத்தனர்.

அரசாங்கத்திற்கு எதிராக குறிப்பாக அரச தலைவருக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்புக்கள் வெடித்துள்ளன.

இந்நிலையில், பல இடங்களில் காவல்துறையினரும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு தமது ஆதரவுகளை வழங்குவதை காணக்கூடியதாக உள்ளது.