சபாநாயகர் ‘பொய்காரன்’ – நாடாளுமன்றத்தில் ஆவேசப்பட்ட சமிந்த விஜேசிறி

0
288

அமைச்சர்கள் சட்ட ரீதியாக பதவி விலகவில்லை எனவும் அவர்கள் பதவி விலகியதாக கருதி சபாநாயகர் செயற்படுவது தவறு எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி (Chaminda Wijesiri) நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு  உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில், 

அநுர பிரியதர்ஷன யாபா, அமைச்சர்கள் சட்டரீதியாக பதவி விலகவில்லை என்ற முக்கியமான விடயத்தை கூறினார். சபாநாயகர் நீங்களும் பொய்யர் என்பது ஒப்புவிக்கப்பட்டுள்ளது.

47 சரத்திற்கு அமைய அமைச்சர்கள் சட்ட ரீதியாக பதவி விலகவில்லை. அமைச்சர்கள் தமது பதவி விலகல் கடித்தை அரச தலைவரிடம் கையளிக்கவில்லை. இதனால், அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் இல்லை என்று கருதி சபாநாயகர் செயற்படுவது மிகவும் தவறானது.

அமைச்சர்கள் பதவி விலகி இருப்பது குறித்து அரச தலைவர் சபாநாயகருக்கு எழுத்துமூலம் அறிவிக்கவில்லை.

47 சரத்திற்கு அமைய அமைச்சர்கள் பதவி விலகல் கடித்தை அரச தலைவரிடம் கையளிக்கலாம். ஆனால், அவர்கள் கையளிக்கவில்லை. இதனால், அவர்கள் பதவி விலகவில்லை.

சட்ட ரீதியாக அமைச்சர்கள் விலகாத போது மக்களிடம் அடிவாங்குவதை தவிர்க்க அமைச்சர்கள் பதவி விலகியுள்ளதாக கூறினாலும் சபாநாயகர் என்ற வகையில்,அவர்கள் பதவி விலகியதாக கருதி செயற்படுவது தவறு.

இதனால், பிரதமர் அவர்களே நாட்டு மக்கள் என்ன கேட்கின்றனர் என்பதை சஜித் பிரேமதாச தெளிவாக கூறினார். பிரதமரின் மெதமுலன வீட்டின் மீது தாக்குதல் நடத்தும் போது அந்த துயரத்தை பிரதமர் உணர்ந்திருப்பார்.

மக்களின் நிலைப்பாட்டை நோக்கி செல்லும் வேலைத்திட்டத்தை உருவாக்கி விட்டு, ஜனாதிபதியும் அரசாங்கமும் பதவி விலக வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.