சட்டவிரோதமாக மதுபானங்களை விற்பனைக்காக எடுத்துச் சென்ற நபர் கைது!

0
459

மட்டக்களப்பு நகரில் சட்டவிரோதமாக ஏறாவூர் குடியிருப்பு பிரதேசத்துக்கு மதுபானங்களை பட்டா ரக வாகனத்தில் விற்பனைக்காக எடுத்துச் சென்ற நபர் ஒருவரை 250 கால் போத்தல்கள் கொண்ட மதுபானங்களுடன் நேற்று (02) இரவு 6.30 மணியளவில் கைது செய்துள்ளதாக மட்டு தலைமயக பொலிஸார் தெரிவித்தனர்.

மாவட்ட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான நேற்று இரவு 6.30 மணியளவில் மட்டக்களப்பு பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டபிள்யூ.எம்.எஸ். சந்திரகுமார தலைமையிலான பொலிஸ் குழுவினர் நகர் பகுதியான கோட்டமுனை பாலத்துக்கு அருகில் பட்டா ரக வாகனத்தில் மதுபானங்களை எடுத்துச் சென்ற வாகனத்தை சுற்றிவளைத்து மடக்கி பிடித்து சோதனையிட்டனர்.

இதன் போது ஒருவரை கைது செய்ததுடன் 250 கால்போத்தல் கொண்ட மதுபான போத்தல்களை மீட்டதுடன் பட்டாரக வாகனத்தை கைப்பற்றியுள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் முன்னிலைபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.