இலங்கையில் கையிருப்பில் உள்ள கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம்!

0
266

இலங்கையில் கையிருப்பில் உள்ள கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் அபாயம் நிலவுவதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் ஜூலை மாதம் அளவில் பெருந்தொகையான கோவிட் தடுப்பூசிகள் காலாவதியாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, அதற்கு முன்னதாக பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொள்ளாதவர்கள் உடன் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

நாட்டின் மொத்த சனத்தொகையில் 90 வீதமானவர்கள் ஒரு தடுப்பூசியேனும் ஏற்றிக்கொண்டுள்ளனர். இரண்டாவது தடுப்பூசியை ஏற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை 75 வீதமாக காணப்படுகின்றது.

எனினும் பூஸ்டர் தடுப்பூசி ஏற்றிக் கொண்டவர்களின் எண்ணிக்கை மொத்த சனத்தொகையில் 55 வீதமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்பொழுது நாளாந்த தொற்று உறுதியாளர் எண்ணிக்கை 200 என்ற அளவில் காணப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தடுப்பூசி ஏற்றிக் கொள்ளல் மற்றம் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுதல் ஆகிய காரணிகளினால் தொற்று உறுதியாளர் எண்ணிக்கையை குறைந்தளவில் பேண முடிந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பண்டிகைக் காலத்திலும் இந்த நிலைமையை பேணினால் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை வரையறுக்க முடியும் என டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.