இலங்கைக்கு இந்திய இராணுவம் அனுப்பப்படவில்லை! இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்பு

0
463

இலங்கையில் இடம்பெறும் போராட்டங்கள் மற்றும் நெருக்கடி நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இந்தியா தனது படை வீரர்களை அனுப்பியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் உண்மைக்குப் புறம்பானவை என இலங்கையிலுள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலயம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கையில்,

”இந்தியா தனது படைவீரர்களை இலங்கைக்கு அனுப்புவதாக சில இணைய ஊடகங்களில் வெளியாகும் அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை உயர் ஸ்தானிகராலயம் கடுமையாக மறுக்கிறது. உயர் ஸ்தானிகராலயம் இத்தகைய பொறுப்பற்ற அறிக்கையிடலைக் கண்டிப்பதோடு, இவ்வாறானவர்கள் வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம்” இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அண்மைய நாட்களாக இலங்கையில் இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் செய்தி வெளியிட்ட இணையதள ஊடகமொன்றில், ‘இலங்கையில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலைக் கருத்திற் கொண்டு இந்தியா அதன் நட்பு நாடான இலங்கையைப் பாதுகாக்கும் நோக்கில் டெல்லி இந்திய விமானப்படைத்தளத்திலிருந்து 180 இந்திய இராணுவ வீரர்களுடன் விமானங்களை அனுப்பி வைத்துள்ளது.’ என்ற செய்தி வெளியிடப்பட்டுள்ளது.ஆனால் இந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் இந்திய உயர்ஸ்தானிகராலயம் இந்த அறிவிப்பை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.