மூன்று பிள்ளைகளின் தாய் கத்தியால் குத்திக் கொலை!

0
267

மட்டக்களப்பு – ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள சவுக்கடி கிராமத்தில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் சவுக்கடி முருகன் கோயில் வீதியை அண்டி வசிக்கும் 38 வயதுடைய பெரியான் சிவரஞ்சனா என்பவரே மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

உறவினர்களால் சடலம் மீட்கப்பட்டு உடற்கூராய்வுப் பரிசோதனைகளுக்காக ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபரான பெண்ணின் கணவன் சிவரஞ்சன் தயாளகுமார் (வயது 40) தலைமறைவாகியுள்ள நிலையில் அவரைத் தேடும் பணியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பில் உயிரிழந்த பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கையில், சிவரஞ்சனா அவரது கணவனால் ஏற்கனவே பலமுறை தாக்கப்பட்டுள்ளார்.

அவர் கொலை செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் தலையில் பலத்த காயமடைந்த நிலையில் 13 தையல் இடப்பட்ட நிலையில் குணமடைந்திருந்தார்.

குடும்ப வறுமை காரணமாக சிவரஞ்சனா 16 வருடங்களுக்கும் மேலாக அவ்வப்போது மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்றே தனது குடும்பத்தையும் பிள்ளைகளையும் பராமரித்து வந்தவர் என குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.