பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ள பாடசாலை மாணவர்கள்!

0
466

கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பிரபல பாடசாலை ஒன்றில் சுமார் 20 மாணவர்கள் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டிக்கொண்டுள்ளதாக சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் தரம் ஒன்பதில் கல்வி பயிலும் மாணவர்கள் பலர் பிளேட்டினால் தங்களது கைகளை தாங்களே வெட்டியுள்ளனர்.

பின்னர் குருதியினை கடதாசி மூலம் துடைத்துவிட்டு கிருமி தொற்று நீக்கி (சானிடைசர்)யினை காயத்தின் மேல் தெளித்து கொண்டதாக நேரில் பார்த்த சக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனை குறித்த மாணவர்கள் சாதாரணமாக செய்து கொள்வதாகவும், ஒருவருக்கு ஒருவர் பார்த்து வெட்டிக்கொண்டதன் மூலமே வெட்டியவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததாகவும் சக மாணவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் மருத்துவர்கள் கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறான செயற்பாடுகள் ஒரு வித உளவியல் பிரச்சினையாக கூட இருக்கலாம். மாணவர்களுடன் உரையாடி அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

கோபத்தை கட்டுப்படுத்த முடியாத நிலையில் ஒரிரு மாணவர்கள் செய்வதனை பார்த்து ஏனைய மாணவர்களும் இவ்வாறு செய்து கொண்டதாகவும், கட்டிளம் பருவத்தில் மாணவர்கள் இது போன்ற ஹீரோசியம் எனும் போர்வையில் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுப்படுவதாகவும் உளநல மருத்துவர் ம. ஜெயராசா தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைகளில் வெட்டுக்கொள்ளும் மாணவர்கள் அனைவரும் கட்டாயம் போதை பொருள் பாவணைக்கு அடிமையான மாணவர்கள் அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கைகளை வெட்டிக் கொள்ளும் மாணவர்கள் தங்களது கல்வி நடவடிக்கைள் நிறைவுற்று வேலை வாய்ப்புக்கள் முக்கியமாக பொலிஸ், நீதித்துறை மற்றும் இராணுவம் உள்ளிட்ட பல தொழில் துறைகளுக்கு நேர்முகத் தேர்வுகளுக்குச் செல்லும் பெரும் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே இம் மாணவர்களுக்கு தாங்கள் உளவியல் ஆலோசனைகளையும், அறிவுரைகளையும் வழங்கவுள்ளதாகவும் இதன்போது மருத்துவர் தெரிவித்துள்ளார்.