விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் பிரான்ஸில் காலமானார்!

0
274

விடுதலைப்புலிகளின் முன்னாள் முக்கியஸ்தர் இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் தனது 51 ஆவது வயதில் பிரான்ஸில் உயிரிழந்துள்ளார்.

விடுதலைப்புலிகளின் காலத்தில் தமிழீழக் காவல் துறையில் ஒரு முதன்மை ஆய்வாளராகவும் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளராகவும் பணியாற்றி முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தம்வரை மக்களோடு மக்களாக நின்று தமிழீழக் காவல்துறையின் பொறுப்பதிகாரியாகவும் கடமையாற்றியவர் ஆவார். தமிழ் மக்களின் இனவழிப்பின் சாட்சியமாகவும் இருந்துவந்த இம்மானுவல் நிக்சன் ரஞ்சித்குமார் நேற்றையதினம் (27. 03. 2022) மரணமானார்.

யாழ்.குருநகரைப் பிறப்பிடமாகக்கொண்ட ரஞ்சித்குமார் அவர்கள் தமிழீழக் காவல்துறையில் முதலாம் அணியில் பயிற்சி பெற்றிருந்தார்.

1991 ஆம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி தமிழீழக் காவல்துறையில் அவர் இணைந்துகொண்டார். பயிற்சியின் நிறைவின் பின்னர் யாழ்.சுன்னாகம் பகுதியில் இயங்கிய காவல்பணிமனையில் உப பரிசோதகராக தனது கடமையை ஆரம்பித்து, பின்னர் யாழ்.சாவகச்சேரியில் இயங்கிய காவல்துறை பணிமனைக்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு, அதன்பின்னர் வன்னிப் பெருநிலப்பரப்பில் தனது கடமைகளைப் புரிந்துள்ளார்.

போர்நிறுத்தகால புரிந்துணர்வு ஒப்பந்தம் 2002 கைச்சாத்திட்ட வேளையில், இவர் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழீழக் காவல் துறை பொறுப்பாக இருந்துள்ளார். அதன்பின்னர் முல்லைத்தீவு மாவட்டத்தில் கண்காணிப்பாளராக இறுதிவரை பணியாற்றி இருந்தார்.

தவிர்க்கமுடியாத காரணங்களினால் புலம்பெயர்ந்து பிரான்சு மண்ணில் வாழ்ந்தாலும் அவருடைய சிந்தனைகள் அனைத்தும் தமிழீழம் நோக்கியதாகவே அமைந்திருந்தது.

ஜெனீவா செல்வதற்காக மூன்றாவது கொரோனா தடுப்பூசியை ஏற்றியிருந்த நிலையிலேயே அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு, சத்திர சிகிச்சை ஒன்றை மேற்கொண்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகத் கூறப்ப்படுகின்றது.

இந்நிலையில் அவருடைய இழப்பு என்பது தமிழ் மக்கள் மனதில் இட்டு நிரப்பப்படாத ஒன்றாகவே பார்க்கப்படுகின்றது.