வனஜீவராசிகள் திணைக்களத்தால் வடமராட்சியில் காணி அபகரிப்பு முயற்சி

0
576

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு அம்பன் பகுதியில் வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் காணிகள் அபகரிக்கும் முயற்சி ஏற்பாடாகியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் மக்கள் தெரிவித்துள்ளார். 

அது தொடர்பில் அம்பன் கிராம சேவகரால் அம்பன் மக்களைக் காலை 9:30 மணிக்கு தமது காணிகளுக்கான உறுதிகளுடன் சமுகமளிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கிராமசேவகர் அறிவிக்கையில்,

எல்லைப் பரப்பிற்குள் வருகின்ற மக்களின் காணிகளை வனஜீவராசி திணைக்களம் பார்வையிட்டு (காணி, அதற்கான ஆவணங்கள்) என்பவற்றைப் பார்வையிட்டு மக்களின் காணிகளைத் தவிர்த்து தமது எல்லையினை வகுப்பதற்காக வனஜீவராசி திணைக்களத்தினர் நாளை வருகை தரவுள்ளனர்.

எனவே வைத்தியசாலை முன்பக்கம் தொடக்கம் தங்கராசா என்பவரது வீடு வரை உள்ள வயல் காணி உரிமையாளர்கள் காலை 9.30 மணிக்கு ஆவணங்களுடன் தயார் நிலையில் நிற்குமாறு கேட்டுக் கொள்கின்றேன்” இவ்வாறு அறிவித்துள்ளார்.

இதேவேளை கடந்த 25/03 2022 அன்று ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பிற்கும் இடையில் இடம் பெற்ற சந்திப்பில் தமிழ் மக்களின் எந்தவிதமான காணிகளையும் அபகரிக்க மாட்டோம் என ஜனாதிபதியால் உறுதியளித்ததாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் அதன் பேச்சாளருமான எம்.ஏ சுமந்திரனால் சொல்லப்பட்டுள்ள நிலையில், நாளை இவ் அபகரிப்பு இடம்பெறுவது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.