மீண்டும் டீசல் விலையை அதிகரிப்பதற்கான சதி! வெளிச்சத்திற்கு வந்த தகவல்

0
322

நாட்டில் டீசல்விலையை மீண்டும் அதிகரிப்பதற்கான சதி நடவடிக்கைகளில் சில தரப்பினர் மீண்டும் ஈடுபட்டுள்ளதாக தொழிற்சங்க தலைவர் ஆனந்த பாலித (ananda palitha) தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

லங்கா ஐ ஓ சி நிறுவனம் தனது அனுமதிப்பத்திரம் தொடர்பான முக்கிய நிபந்தனையை மீறியுள்ளது. ஆனால் அந்த நிறுவனத்திற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. லங்கா ஐ ஓ சிக்கு இலங்கையில் செயற்படுவதற்கான அனுமதி மாத்திரமே உள்ளது.

விலைகளை அதிகரிப்பது குறித்த முடிவை பொறுப்பான அமைச்சரே எடுக்கவேண்டும். அவர்களுக்கு வழங்கப்பட்ட உரிமப்பத்திரத்தின் முக்கிய நிபந்தனை அது தரமான எரிபொருளை தடையின்றி நியாயமான விலைக்கு வழங்கப்படவேண்டும் என்பதேயாகும்.

ஆனால் இந்த நிபந்தனைகளை அந்நிறுவனம் மீறியுள்ளது. ஆனால் நடவடிக்கை எடுப்பதற்கான அதிகாரத்தை கொண்டுள்ள அதிகாரிகள் அமைதியாக வேடிக்கை பார்க்கின்றனர்.

அமைச்சரும், அதிகாரிகளும் இது தொடர்பில் எந்த நடவடிக்கையும் எடுக்காததைப் பார்க்கும்போது இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனங்களின் எரிபொருள் நிரப்பு நிலையங்களிலும் விலைகளை அதிகரிப்பதற்கான சதி இடம்பெறுகின்றது என நாங்கள் கருதுகின்றோம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.