பசிலினால் பகிரங்கப்படுத்த முடியாததை அம்பலப்படுத்திய சர்வதேச நாணய நிதியம்!

0
469

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் மறைக்கப்பட்ட விடயம் தற்போது பகிரங்கமாக வெளியிடப்பட்டுள்ளது.

மாநாட்டில் கலந்து கொண்ட ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க, பசில் ராஜபக்ஷவிடம் காண்பிக்குமாறு கூறிய அறிக்கையை சர்வதேச நாணய நிதியம் வெளியிட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் நிலைமை தொடர்பில் வெளியிட்ட தனது அறிக்கையை இன்று பகிரப்படுத்தியுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் கொரோனா தொற்றினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும் வரி குறைப்பு, பணம் அச்சிடுதல், சுற்றுலா வருவாய் இழப்பு மற்றும் நாட்டை மூடி வைத்தல் ஆகிய காரணங்களினால் மிகவும் மோசமான நிலைமைக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தற்போது வரையில் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதத்திற்கும் அதிகமான நிதிப் பற்றாக்குறையை எதிர் கொண்டுள்ளதுடன், கடந்த ஆண்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 119 சதவீதமாக கடன் அதிகரித்துள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமகாலத்தில் இலங்கையில் பணவீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளதுடன் ஒற்றை இலக்க பணவீக்கத்தை அரசாங்கத்தால் கட்டுப்படுத்த முடியவில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற சர்வகட்சி மாநாட்டில் இந்த அறிக்கை தொடர்பில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த அறிக்கை ஒரு வரைவு மாத்திரமே எனவும், இலங்கை அரசாங்கம் இதனை சவாலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் எனவே அதனை வழங்க முடியாது எனவும் நிதியமைச்சர் குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.