வீடுகளில் எரிபொருளை சேமித்து வைப்பவர்களுக்கு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை!

0
317

நாட்டில் தற்போது நிலவும் எரிபொருள் நெருக்கடியினால் வீடுகளில் பெற்றோலை சேமித்து வைப்பதனால் பல விபத்துக்கள் ஏற்படுவதாக சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறு பெற்றோல் வீடுகளில் சேமித்து வைப்பது மிகவும் ஆபத்தானது என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிளாஸ்டிக் சத்திரசிகிச்சை நிபுணர் கயான் முனசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வீடுகளில் எரிபொருட்கள் சேமித்து வைப்பதனால் மிகவும் ஆபத்தான நிலைமை ஒன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நாட்களாக அவ்வாறான பல சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றன. பெட்ரோல், டீசல் போன்ற பொருட்களை சேமித்து வைப்பதற்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கும். எனினும் வீடுகளில் அவ்வாறான பாதுகாப்பு நடவடிக்கைகள் இருக்காது.

எரிபொருட்கள் வாயுவாக வீடுகளில் நிறைந்து காணப்படும். தீக்குச்சிகளை பற்ற வைக்கும் போது வீடு முழுவதும் தீப்பற்றுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

இதேவேளை பெட்ரோல் தொடர்பான தீக்காயங்கள் காரணமாக நாளொன்றில் ஒருவர் உயிரிழக்கும் சம்பவங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இடம்பெறுவதாகவும், நாள் ஒன்று 4 – 6 தீவிபத்து சம்பவங்க்ள இடம்பெற்று வருவதாக வைத்தியர் கயான் முனசிங்க தெரிவித்துள்ளார்.