முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு! எரிபொருளினை பதுக்கும் மக்கள்

0
474

முல்லைத்தீவு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவிவரும் நிலையில் எரிபொருள் நிலையங்களுக்குக் கிடைக்கும் எரிபொருட்களை ஒரு சிலர் பல தடவைகள் பெற்று பதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் குற்றம் சாட்டியுள்ளார்கள்.

இந்நிலையில் விவசாயிகள் மற்றும் வான் ஓட்டிகள் டீசலினை பெற்றுக்கொள்ள முண்டியடித்து வருகின்றார்கள்.

மல்லாவி, மாங்குளம், ஒட்டுசுட்டான், முள்ளியவளை, முல்லைத்தீவு, நாயாறு, பதுக்குடியிருப்பு, விசுவமடு பகுதிகளில் கூட்டுறவுச் சங்கங்களில் எரிபொருள் விற்பனை நிலையங்கள் காணப்படுகின்றன.

எரிபொருள் நிரப்பு நிலையங்கள் பலவற்றில் பெட்ரோல் உள்ளபோதும் டீசல், மண்ணெண்ணெய் இல்லாத நிலை காணப்படுகின்றது. விசுவமடு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு நேற்று (23) ஒரு டாங் டீசல் வந்தபோது அது இன்று (24) காலை 10.00 மணிக்கு முடிவடைந்துள்ளது.

புதுக்குடியிருப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எதுவித எரிபொருட்களும் அற்ற நிலை காணப்படுகின்றது. அத்துடன், முல்லைத்தீவு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெட்ரோல் காணப்பட்டாலும் டீசல் பற்றாக்குறை காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

முல்லைத்தீவு – துணுக்காய் பல நோக்கு கூட்டுறவுச்சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இராணுவப் பிரசன்னத்துடன் எரிபொருள் விநியோகம் இன்று (24) இடம்பெற்று வருகிறது.

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று அதிகாலை கிடைக்கப்பெற்ற 6600 லீற்றர் டீசலானது, ஒவ்வொரு வாகனங்களுக்கும் தலா 5000 ரூபாய்க்கு ஏற்ப வழங்கப்பட்டு வருகிறது.

இதே வேளை வாகனங்களுக்கு வழங்கப்படும் எரிபொருளானது வாகனங்களுக்கு இலக்கங்கள் வழங்கப்பட்டு, அதே நேரத்தில் இராணுவத்தினராலும் வாகன இலக்கத்தகடுகள் பதியப்பட்ட பின்னரே வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் வாகனங்கள் தரித்து நிற்பதாகவும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் இல்லை எனும் பதாகை கடந்த இரு நாட்களாகக் காணப்பட்ட போதும் மண்ணெண்ணெய் விநியோகம் ஒரு குடும்ப அட்டைக்குத் தலா 500 ரூபாய் வீதமே வழங்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் அதிகளவான உழவு இயந்திரங்களைக் கொண்ட மாவட்டமாக முல்லைத்தீவு மாவட்டம் காணப்படுகின்றது. உழவு இயந்திரம் மற்றும் கனரக இயந்திரங்களின் பயன்பாடுகள் காரணமாக உரிமையாளர்கள் டீசல்களை அதிகளவில் பதுக்கி வருகின்றார்கள்.

இதேவேளை பேருந்து உரிமையாளர்கள் பேருந்துக்கு அதிகளவிலான மண்ணெண்ணெய்யினை விட்டு ஓட்டுகின்றமையினை காணக்கூடியதாக இருக்கின்றது.

இவ்வாறான நிலையில் எரிபொருளின் பதுக்கல் நிலையினை கட்டுப்படுத்த பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பிரசன்னமாகியுள்ளார்கள் என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.